எது பொருளாதார வளர்ச்சி? எந்த திட்டங்கள் எல்லாம் நல்ல திட்டங்கள்?

எது பொருளாதார வளர்ச்சி?

எந்த திட்டங்கள் எல்லாம் நல்ல திட்டங்கள்?

இந்த கருப்புச் சட்டைக் காரர்களும் சிகப்புச் சட்டைக் காரர்களும் மற்றும் நீலச் சட்டைக் காரர்களும் எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று போனால் நாடு எப்போது தான் வளர்ச்சிப் பாதையில் செல்வது? வேலை வாய்ப்பு வேண்டும். ஆனால் பெரிய நிறுவனங்கள் வரக்கூடாது. அது எப்படி? எங்கு திரும்பினாலும் போராட்டம். எதற்கெடுத்தாலும் போராட்டம்.

எப்பொழுதும் கொள்கை கொள்கை என்று நாட்டை சீரழிகிறார்கள். ஆள்பவர் நாட்டை வலிமையாகவும் கட்டுப்பாட்டுடனும் வைக்கும் போது, இது மாதிரியான திருடர்களும் துரோகிகளும் பயங்கரவாதிகளும் பொங்கி எழுந்து சமூகத்தில் சகிப்புத்தன்மை இல்லை என்று புகார் கூறுவார்கள்.

இப்படியெல்லாம் பேசும் படித்த மாதம் 30000 சம்பளம் வாங்குகின்ற இட ஒதுக்கீட்டில் படித்த இளைய பட்டதாரிகளுக்கே இந்தக் கட்டுரை.  முதலில் இது போன்ற திட்டங்களை நான்கு கோணங்களில் பார்க்க வேண்டியது அவசியம்.

முதலில் அது என்ன மாதிரியான திட்டங்கள். அது சுற்றுசூழலுக்கு பாதுகாப்பானதா என்பது. இன்றைய அவசர வளர்ச்சிக்காக ஒரு தனியார் நிறுவன வளர்ச்சிக்காக இயற்கையை அளித்து விட்டால், நாளை நம் பிள்ளைகள் எங்கு வாழ்வார்கள்? அவர்களுக்கு பட்டாம் பூச்சியின் படபடப்பு  பற்றி எப்படித் தெரியும். நலிந்த நீரோடை, பச்சைவண்ண காடுகள் பற்றியெல்லாம் அவர்கள் பாட புத்தகத்தில் வரைபடம் பார்த்து கற்று கொள்வதா? இந்த மனித இனம் இயற்கையில்  ஓர் விபத்து. இந்த விபத்தில் தோன்றிய முதல் மனிதன் எதை பற்றி சிந்தித்திருப்பான் என்ற ஆய்வறிக்கையின் முடிவு தெரியுமா? ஏன் சூரியன் உதிக்கிறது. சிறிது நேரத்தில் காணாமல் போகிறது. கடுமையாக குளிர்கிறது. மீண்டும்  மறுபடியும் சூரியன் வருகிறது? என்ன இதெல்லாம்! ஏன் இப்படி நடக்கிறது?

மனிதனின் முதல் சிந்தனை இதுவாகத்தான் இருந்திருக்குமாம். அந்த கேள்விகள் கொஞ்சம் இப்போது வடிவம் மாறி உள்ளன. வேறு உலகம் உண்டா. அங்கே தண்ணீர் உள்ளதா? மனிதன் வாழ முடியுமா?  இது போன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தான் உலகில் உள்ள அனைத்து இலக்கியங்களும் பேசுகின்றன. அது நேரடியாகவோ... மறைமுகமாகவோ... இலக்கியம் இயற்கையை கண்டு பிரம்மிக்கிறது. இந்த இயற்கையை அளித்து விட்டு அடுத்த தலைமுறை எங்கு வாழும்?

இரண்டாவது இது யாருக்கான திட்டம்? இந்தியா என்னும் ஓர் நாடு உண்டு. அது வளர்ச்சிப் பாதையில் செல்வதாக அறிக்கை மேல் அறிக்கை. சீனாவை முந்தி விட்டோம். மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ந்துள்ளது என்று கூச்சல் மேல் கூச்சல். ஆனால், அந்த விபரங்களை பகுத்துப் பார்த்தால், அதில் உள்ள அதிக வளர்ச்சி மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே. உதாரணம்: இந்தியாவில் 10000 பேர் உள்ளதாக வைத்துக்கொள்வோம். இதில் கடைசியில் உள்ள 5000 பேருக்கு கிடைக்கும் மொத்த வருவாயை விட பணபலம் படைத்த முதலில் உள்ள ஒருவருக்கு கிடைக்கும் மொத்த வருவாய் அதிகம் (குறிப்பு: இது வருவாய் விபரம் மட்டுமே. வருடா வருடம் இவ்வளவு சம்பாதிக்கும் அந்த ஒருவர் எவ்வளவு சொத்து வைத்திருப்பார் என்று யோசித்து பாருங்கள். ). பணக்காரனுக்கும் ஏழைக்குமான இடைவெளி மிக மோசமான அளவு வளர்ந்துள்ளது.

மூன்றாவது, இதை பற்றி பேசும் முன், ஒரு உதாரணம் கூறிவிடுகிறேன். நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தாலும் ஆகாதவராக இருந்தாலும் சரி. உங்கள் திருமணம் இன்று முடிவு செய்து நாளை நடக்குமா? (அல்லது நடந்ததா). இல்லை... இந்த வருடத்தில் திருமணம் செய்ய வேண்டும். இவ்வளுவு செலவாகும். அதற்கு எந்தெந்த வருடம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று திட்டம் போட்டு தானே செய்கிறோம். கடன் வாங்கி கல்யாணம் பண்ணக் கூடாது என்பார்கள். வீட்டில் ஒரு நியாயம். நாட்டிற்கு வேறு நியாயமா? ஒரு நாடு தன் நாட்டில் இவ்வளவு வளர்ச்சி வேண்டும். அதை செய்ய இவ்வளவு செலவாகும். அதற்கு இந்திந்த முறையில் இவ்வளவு எடுத்து நாம் கடன் வாங்காமல் செய்து விட முடியும் என்றால் அது சிறந்த திட்டம். அதை விடுத்து, நான் சேமிக்க மாட்டேன். உலக வங்கி கடன் பெற்று இதை நடைமுறை படுத்துவேன் என்றால், அதை விட கொடிய முட்டாள்தனம் எதுவுமில்லை. இது கூட பரவாயில்லை. இப்போதெல்லாம் இந்த வருடம் உலக வங்கி இவ்வளவு கடன் தரும் அதற்கு என்ன திட்டத்தை செயல் படுத்தலாம் என்று யோசிக்கும் நிலைக்குவந்து விட்டது நம் அரசு. தேவைக்கு கடன் வாங்காமல், கடன் தருகிறார்கள். வாங்கி ஏதேனும் செயல் படுத்தலாம் என்று செயல்படுகிறது அரசு. இது மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இந்த உலக வங்கியை கொண்டு தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்ற நாடுகளை கைப்பற்றுகிறது என்பது உண்மை. இதை தெரிந்து கொள்ள "ஒரு பொருளாதார அடியாள் வாக்குமூலம்" என்ற புத்தகத்தை அனைவரும் படிக்க, பேசவேண்டியது அவசியம்.

 நான்காவது மேல்கூறிய அனைத்து கூறுகளையும் ஒரு திட்டம் தாண்டி வந்து விட்டது. இப்போது அதை செயல் படுத்தலாமா என்றால் இன்னொன்று உள்ளது. அதை எங்கே யாரிடத்தில் செயல் படுத்துவது? ஒரு அணை வருவதாக வைத்துக்கொள்வோம். அது எங்கே வரும். எவ்வளவு அளவில் வரும்?

ஒரு அணை கட்ட குறைந்தது 1000 ஏக்கர் செலவாவதாக வைத்துக் கொள்வோம். எப்படியும் ஒரு மலை சார்ந்த அல்லது விவசாயம் சார்ந்த இடத்திலேயே அணை வரும். அத்தனை நிலங்களை எடுத்து அணை காட்டினால், அந்த மலைவாழ் மக்கள் எங்கே போவார்கள்? யாரிடம் வேலை செய்வார்கள். அவர்களுக்கு விவசாயத்தை விட்டால் ஆடு மேய்ப்பதை விட்டால் என்ன வேலை தெரியும்? அது மட்டும் அல்ல அந்த 1000 ஏக்கரில் எவ்வளவு உயிரினங்கள் வாழ்கின்றன. அதில் எத்தனை அறிய வகை உயிரினம்? நம் திட்டத்தால் அவை அழிந்து விடுமா? அதை பாதுகாக்க என்ன செய்வது என்று பார்த்து செய்கிறார்களா என்பது கேள்வி.

தென் அமெரிக்காவில் ஈகுவடோர் என்று ஒரு நாடு உண்டு. அமேசான் காடுகள் வளர்ந்த நாடு. அங்கே எண்ணெய் வளம் இருப்பதாய் டெக்சாகோ என்ற எண்ணெய் நிறுவனம் கண்டு பிடிக்கிறது. அந்நிறுவனமும் எஸ்ஸோன் வோல்டெக்ஸ் என்ற நிறுவனமும் சேர்ந்து 1.3 பில்லியன் செலவில் ஒன்றரை லட்சம் பேரல் எண்ணெய் எடுக்க திட்டம் போடுகிறது. மொத்தம் 300 மைல் நீளத்தில் எண்ணெய் குழாய்கள். அதன் விளைவாய் விரிந்த வளர்ந்த பசுமை காடுகள் அளிக்கப் பட்டன. கிளிகளும் சிறுத்தைகளும் சுவடின்றி அளிக்கப்பட்டன. மூன்று பழங்குடி இனங்கள் அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்டன. பன்னெடுங்காலமாக ஓடிய நதிகள் சாக்கடையாக்கப் பட்டன. இதை எதிர்த்து அமெரிக்க வழக்கறிஞர்கள் டெக்ஸ்ன் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஒரு நாளைக்கு 40 லட்சம் கேலன் எண்ணெய் எடுக்கும் இந்நிறுவனம் எண்ணெய் மாசு கழிவுகளையும் சுத்திகரிப்பு ரசாயங்களையும் ஆற்றில் கொட்டி நிலத்தை சீரழித்துள்ளதையும் மக்களையும் அரியவகை விலங்குகளையும் கொன்று குவித்துள்ளது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது. (கட்டுக்கதை அல்ல)

இப்படி எந்த நாசக் கேடுகளையும் அந்த திட்டம் செய்யாது என்றால் தாராளம் அத்திட்டத்தை செயல் படுத்தலாம். எந்த கருப்புச் சட்டைக் காரர்களும் நீலச் சட்டைக் காரர்களும் சிகப்புச் சட்டைக் காரர்களும் எதிர்க்க மாட்டார்கள். மற்றவர் படும் கஷ்டத்தை பார்த்தால் புரியாது. அந்த வலி தனக்கு வந்தால் புரியும் என்பார்கள். இந்த எதிர்ப்புவாதிகள் கஷ்டப்படும் மக்களின் கண்ணாடியில் பார்க்கிறார்கள் போலிருக்கிறது. அம்பேத்கரின் பெரியாரின் கண்ணாடி கொண்டு பார்க்கிறார்கள் போலிருக்கிறது. தன் எதிர்காலத்தைப் பற்றியும் இயற்கையைப் பற்றியும் சிந்திக்கிறார்கள் போலிருக்கிறது...

பாவம்...

மடையர்கள்...

முட்டாள்கள்...

Comments